Sunday, May 1, 2011

பண்டைய சமுதாயங்கள்


இந்த உலகின் பல பாகங்களிலும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித நாகரிகத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு கால கட்டங்களிலும் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனரெனக் காட்டுவதற்குரிய சான்றுகள் பலவற்றை அக்காலங்களில் வாழ்ந்த சமுதாயங்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் நாம் அறிந்தவை கொஞ்சம், அறியாதவை ஏராளம்.
பண்டைய பத்ரா நகரின் கருவூலம்

ஒவ்வொரு சமுதாயத்திலும் வாழ்ந்த மானிடக் குழுக்களின் சமுதாய வாழ்வு எவ்வாறு காணப்பட்டது, அவர்கள் தம் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றினர், அவர்களின் ஆட்சி, நிருவாகம் எப்படியிருந்தது, அவர்களது உணவு, உடை மற்றும் கலாசாரம் எவ்வாறு இருந்தது, ஏனைய சமுதாயத்தினருடன் எப்படித் தொடர்புற்றனர், மதம் அல்லது சடங்குகள் எவ்வாறு காணப்பட்டன, அவர்களுடைய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் எப்படியிருந்தன என்பவற்றையெல்லாம் மானிட வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் சரிவரப் பதியாத சமுதாயங்கள் ஏராளம் இவ்வுலகில் வாழ்ந்துதானிருக்கின்றன. அஞ்சா நெஞ்சர்களாக, தோள் வலிமை சிறந்தவர்களாக, கடின உழைப்பாளிகளாக அச்சமூகங்கள் காணப்பட்டுள்ளன. பிற்காலத்தில் வந்த கயவர்களாலோ அல்லது அவர்களது சமகாலத்தில் காணப்பட்ட ஆதிக்க வெறியர்களாலோ அவ்வாறான சமுதாயங்கள் பல பூண்டோடு அழிக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றமும், தப்பி வாழ்வதற்குப் போதிய அறிவின்மையும், உயிருக்குக் கேடான தொற்று நோய்களும், நீண்ட கால வறட்சி போன்ற காரணங்களால் ஏற்பட்ட பசிக் கொடுமையும் அவ்வாறான சமுதாயங்கள் இவ்வுலகிலிருந்து முற்றிலும் துடைத்தெறியப்படுவதற்கு வேறு காரணங்களாக அமைந்துள்ளன.
மொகெஞ்சோதரோ (பாக்கிஸ்தான்)

அவ்வாறான சமுதாயங்கள் உண்மையிலேயே எப்படியிருந்தன என்பதையெல்லாம் இன்று நாம் காணும் அழிபாடுகள் மூலமே ஓரளவுக்கேனும் அறிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு சமுதாயங்கள் எழுத்து முறைகளைக் கொண்டிருந்தன. எனினும், அவ்வெழுத்துக்களில் ஏராளமானவற்றை எவ்வகையிலும் படித்தறிய முடியாத நிலை இன்றும் காணப்படுகிறது. இத்தரையிலிருந்து துடைத்தெறியப்பட்ட சமுதாயங்களின் வரலாறுகள் இன்றைய சமூகங்களுக்கு மிகச் சிறந்த பாடங்களாகும்.

ஒரு சமுதாயத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்ததாக எதையெல்லாம் நாம் காண்கிறோமோ, அவற்றையெல்லாம் நாம் தவிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனாலேயே புனித குர்ஆனில் இப்படிக் கூறப்பட்டுள்ளது: அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். – அர்ரூம்: 09. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன். – ஃபாதிர்: 42.
அல்-ஹிஜ்ர் (சவூதி அரேபியா)

வரலாற்றைக் கற்கையில் நாம் அருஞ் செயல்கள் பலவற்றைக் கண்டு வியக்கிறோம். ஆகா, ஒகோ என்கிறோம். பண்டைக் கால மக்கள் வாழ்ந்த இடங்களை நாம் நேரில் பார்க்க வேண்டாமா என ஏங்குகிறோம். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலகின் ஏராளமான பகுதிகள் ஏனையோரால் எளிதாக அடைய முடியாதனவாகவே இருந்துள்ளன. பண்டைய காலத்தில் மனிதரால் அறிந்துகொள்ள முடியாதிருந்த பகுதிகளுக்கு பிற்காலத்தவர் பலர் பிரயாணம் செய்துள்ளனர். பெருங்கடல்களையும் பனிபடர்ந்த மலைகளையும் அடர்ந்த காடுகளையும் சதுப்பு நிலங்களையும் வெப்ப மிகுதியான பாலை நிலங்களையும் உயிர்கொல்லி விலங்குகளையும் பொருட்படுத்தாது ஆராய்ச்சியாளர் பலரும் அலைந்து திரிந்து கண்டுபிடித்த பண்டைய நாகரிகங்களின் எச்சங்கள் ஏராளம். அவற்றிலிருந்து கொஞ்சமாவது நாமும் தெரிந்திருக்க வேண்டாமா? அதனாற்றான் அவ்வாறான செய்திகளை அடுத்த பதிவிலிருந்து தீந்தமிழில் தர விழைகிறேன்.

No comments: